
திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் அறையில் திமுக நகர மன்ற தலைவியின் கணவர் பட்டியலினத்தை சேர்ந்த இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுந்த புகார் மீது அறையில் பொருத்தப்பட்ட CCTV பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சக நகர மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில்,
கடந்த 29ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆணையாளரின் அறைக்குள் அழைத்து சென்று நகர மேலாளர் மற்றும் சக அலுவலர்கள் முன்னிலையில் இளநிலை உதவியாளர் முனியப்பனை தி.மு.க.,வை சேர்ந்த நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனின் கணவரும், 8வது வார்டு திமுக கவுன்சிலருமான ரவிச்சந்திரன், முனியப்பனுக்கும், 20-வது வார்டு தி.மு.க., பெண் நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை சமாதானம் செய்வதற்காக மன்னிப்பு கேட்க செய்துள்ளார். அப்போது அங்கிருந்த கவுன்சிலர் ரம்யா, வாயால் சொன்னால் போதுமா? என கேட்டதாக தெரிகிறது. இதனால் நகராட்சி அலுவலர்கள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் வேறு வழி தெரியாததால் கவுன்சிலர் ரம்யாவின் காலில் முனியப்பன் விழுந்துள்ளார்.
ஒரு பெண் கவுன்சிலரின் காலில் நகர மன்ற தலைவரின் கணவர், பட்டியலினத்தை சேர்ந்த ஒரு நகராட்சி அலுவலரை காலில் விழவைத்ததாக தகவல் வெளியாகியதால், இதனால் சமுதாய பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக கூறி அந்தப் புகாரின் மீது உண்மை தன்மையை அறிய ஆணையாளர் அறையில் உள்ள CCTV – காட்சியினை ஆய்வு செய்து பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அதனை வெளியிடுமாறு புகார் மனுவினை, நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் திண்டிவனம் நகராட்சி மேலாளர் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., யிடம் மனு அளித்தனர். மனிதாபிமானம் அற்ற முறையில், ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த நகராட்சி அலுவலரை காலில் விழ வைத்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.